சென்னை: தமிழகத்தில் என்.பி.ஆர் எனப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேடு நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாநில வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ), என்.பி.ஆர் (தேசிய மக்கள்தொகை பதிவேடு) மற்றும் என்.சி ஆர் (தேசிய குடிமக்கள் பதிவேடு) உள்ளிட்டவைகளுக்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியது. தமிழகத்திலும் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் என்.பி.ஆர் (தேசிய மக்கள்தொகை பதிவேடு) நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தை ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்றும் என்பிஆர் கணக்கெடுப்பின் போது, குடிமக்கள் எந்த ஒரு ஆவணங்களையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். புதிய என்.பி.ஆர் சட்டத்தில் மூன்று கேள்விகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் இது தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழக அரசு எழுதிய கடிதத்திற்கு மத்திய அரசுத்தரப்பில் இருந்து இதுவரை பதில் கிடைக்காததால் கணக்கெடுப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.