திருவொற்றியூரில் வீடுகள் இடிந்து விழுந்து பாதிப்படைந்தவர்களுக்கு உடனடியாக மாற்று வீடுகள் மற்றும் நிவாரண உதவி அளிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருவொற்றியூரில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினால் 1993-ல் கட்டப்பட்ட பழைய குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததில் 24 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்து அதனால் மக்கள் பாதிப்படைந்த செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன்.
விபத்து நடந்த பகுதிக்கு உடனடியாக மாண்புமிகு குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திருதாமோ அன்பரசன் அவர்களை நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அனுப்பி வைத்து விபத்தில் வீடிழந்த குடும்பத்தினருக்கு உடனடியாக மாற்று குடியிருப்புகள் வழங்கவும் அறிவுறுத்தியுள்ளேன் பாதிக்கப்பட்ட மக்கள்; பாதிப்பிலிருந்து மீண்டு புதிய வாழ்க்கையைத் துவங்க 24 குடும்பங்களுக்கும் தலா ரூபாய் ஒரு லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இதுபோன்ற விபத்து ஏற்படாத வகையில் பழைய குடியிருப்புகளின் விபரங்களைச் சேகரிக்கவும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
