மகாராஷ்டிராவில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையை அடுத்த பிவாண்டி பகுதியில் ஜிலானி என்ற பெயரில் 3 மாடி கட்டடம் இருந்தது. இந்த கட்டிடத்தில் மொத்தம் 40 வீடுகளில் சுமார் 150 பேர் வசித்து வந்தனர்.
இதற்கிடையில், கடந்த திங்கள்கிழமை அதிகாலை 3.30 மணி அளவில் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, கட்டடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அதிகாலை என்பதால் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தபோதே விபத்து ஏற்பட்டதன் காரணமாக இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்த தீயணைப்பு படையினர், காவல்துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆகியோர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தால் கட்டட இடிபாடுகளுக்கும் சிக்கிய 25 பேர் இதுவரை உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஆனாலும், இந்த விபத்தில் நேற்று காலை நிலவரப்படி, 20 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், தொடர்ந்து மீட்பு பணிகளும் நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிவாண்டி கட்டட விபத்தில் உயிரிழந்தோரில் பலரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் கட்டட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை தற்போது 40ஆக அதிகரித்துள்ளது என தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் சிலர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதால் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.